Published : 19 Sep 2020 02:18 PM
Last Updated : 19 Sep 2020 02:18 PM
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவைச் சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், “இரு நாட்டு நல்லுறவு குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை அடுத்த மாதம் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. மேலும், இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலிய, ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும் மைக் பாம்பியோ சந்திக்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகா ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக சர்வதேசத் தலைவர் ஒருவரைச் சந்திக்க உள்ளார்.
ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1 ஆம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT