Published : 19 Sep 2020 07:12 AM
Last Updated : 19 Sep 2020 07:12 AM

சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை பாக்டீரியா தொற்று

பெய்ஜிங்

சீனாவில் பாக்டீரியா மூலம் புதிதாக ஒரு காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி உள்ளது. இந்தப் பிரச்சினையே இன்னும் தீராத நிலையில் புதிதாக ஒரு பாக்டீரியா சீனாவிலிருந்து பரவி வருவது தெரியவந்துள்ளது.

வடமேற்கு சீனாவிலுள்ள கன்சு மாகாணத்தின் தலைநகர் லான்ஷோவில் இருந்து இது பரவுவது தெரியவந்துள்ளது. இதை லான்ஷோவிலுள்ள சுகாதார ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 3,245 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் மிகவும் தீவிரத் தன்மை கொண்டதாகவும், வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும். இந்த வகை நோய் ஆண்களை மலட்டுத்தன்மையடையச் செய்யக் கூடும் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) வெளியிட்ட அறிக்கையில், "இந்த நோய் பாதித்
தவர்களுக்கு தலைவலி, தசை வலி, காய்ச்சல், உடல் சோர்வு ஆகியவை இருக்கும். இந்த அறிகுறிகள் உள்ளவர்களில் சிலருக்கு இதை குணப்படுத்தலாம். சிலருக்கு வாழ்க்கை முழுக்க அதன் பாதிப்பு தொடரக்கூடும். மூட்டு வீக்கம் அல்லது உடல் உறுப்பு வீக்கம் போன்றவற்றை இந்த பாக்டீரியா ஏற்படுத்தும்.

அதேநேரம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவுவது மிகவும் அரிதான செயலாக இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x