Published : 18 Sep 2020 02:51 PM
Last Updated : 18 Sep 2020 02:51 PM

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி: ஏழு பேரில் ஒருவருக்குப் பக்கவிளைவு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்குப் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 மருந்தைப் பயன்படுத்திய ஏழு பேரில் ஒருவருக்குப் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40,000 பேருக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்தியவர்களில் 14% பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. தசைப் பகுதிகளில் வீக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. மேலும், தங்கள் தடுப்பூசி அனைத்துக் கட்டச் சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று ரஷ்யா சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x