

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை லட்சக்கணக்கான மக்களைக் கொல்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்திடம் ஈரான் முறையிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்குத் தொடர்ந்துள்ளது, அதில், “அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் லட்சக்கணக்கான மக்களைக் கொல்கிறது” என்று ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டு நடந்த உடன்படிக்கையை அமெரிக்கா மீறுகிறது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பு வாதங்களை இவ்வாரம் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்து ‘‘அமெரிக்கத் தூதரைக் கொல்ல ஈரான் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்’’ என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்தது.