

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ கையில் பாலஸ்தீன கொடியுடன் முகத்தில் கருப்பு துணி அணிந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுடன் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காசா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஒப்பந்தம் ஒரு அவமானம் என்று குரல் எழுப்பினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.
ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.
இப்போது பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் 2 நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.