Published : 16 Sep 2020 07:43 PM
Last Updated : 16 Sep 2020 07:43 PM

இஸ்ரேலுடன் நட்பு: பஹ்ரைன், ஐக்கிய அமீரகத்துக்கு ஈரான் மிரட்டல்

பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் பொறுப்பு என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஈரான் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது” இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் தினமும் குற்றங்களை செய்து வருகிறது.
இஸ்ரேலுக்கு உங்கள் கைகளை எவ்வாறு கொடுக்க முடியும்? ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன்தான் தான் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.

இப்போது பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் 2 நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x