

நான் சுவாசிக்கிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டதாக ஜெர்மனி கடந்த வாரம் தெரிவித்தது. இந்த நிலையில், தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அலெக்ஸி பதிவிட்டுள்ளார்.
அதில் அலெக்ஸி நவால்னி குறிப்பிடுகையில், “நான் அலெக்ஸி நவால்னி. என்னால் இன்னும் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், நேற்றைய நாள் முழுவதும் சொந்தமாக என்னால் சுவாசிக்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அலெக்ஸியின் பதிவுக்குக் கீழே பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வழங்கப்பட்டதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. மேலும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு புதின் விஷம் வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
மேலும், அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது.
யார் இந்த அலெக்ஸி நவால்னி?
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்ஸி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ரஷ்யாவில் அலெக்ஸி நவால்னிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதப்பட்டது. அதனால் அலெக்ஸி சிகிச்சைக்காக பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் அலெக்ஸிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.