Published : 15 Sep 2020 05:40 PM
Last Updated : 15 Sep 2020 05:40 PM

பிரிட்டனில் பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடத் தடை

கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரிட்டனில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில், “கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,621 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்படுகிறது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வியடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 2 .9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x