

ஈரான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ஆயிரம் மடங்கு பதில் தாக்குதலை நடத்தும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
ட்ரம்ப் கூறுகையில், ''பத்திரிகைகள் அளித்த தகவலின்படி ஈரான், அமெரிக்கத் தூதரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.
அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இந்நிலையில், இவ்விரு நாடுகள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் இரு நாடுகள் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது.