Published : 14 Sep 2020 11:33 AM
Last Updated : 14 Sep 2020 11:33 AM
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,07,900 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ''கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 3,07,900 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் 3,06,857 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது உலகம் முழுவதும் 2,86,37,952 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
உலகின் பல முன்னணி நாடுகளும் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி, வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
கிட்டத்தட்ட அந்தத் தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT