Published : 14 Sep 2020 07:00 AM
Last Updated : 14 Sep 2020 07:00 AM

தங்கம், 14 ஆயிரம் டாலருடன் பையை ஒப்படைத்த இந்தியர்: துபாயில் போலீஸ் பாராட்டு

துபாயில் யாரோ விட்டு சென்ற பையை, போலீஸில் நேர்மையாக ஒப்படைத்தார் இந்தியர். அவருக்கு பொறுப்புள்ள குடிமகன் என்ற சான்று வழங்கி போலீஸார் பாராட்டி உள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த ரிதேஷ் ஜேம்ஸ் குப்தா என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வசிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநாதையாக கிடந்த ஒரு பை அவர் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அதில் 14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 54,452 டாலர் மதிப்புள்ள தங்கம் ஆகியவை இருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரிதேஷ், உடனடியாக அந்தப் பையை போலீஸில் ஒப்படைத்தார்.

ரிதேஷின் நேர்மையைப் பாராட்டி போலீஸார் அவருக்கு, ‘பொறுப்புள்ள குடிமகன்’ என்ற சான்றிதழை வழங்கி கவுரவித்தனர். ரிதேஷுக்கு துபாயில் உள்ள அல் குசாய்ஸ் போலீஸ் நிலையத்தின் இயக்குநர் பிரிகேடியர் யூசுப் அப்துல்லா சலீம் அல் அதிதி சான்று வழங்கி பாராட்டினார். அதற்கு ரிதேஷும் போலீஸுக்கு நன்றி தெரிவித்தார்.

இத்தகவலை கல்ப் நியூஸ் வெளியிட்டுள்ளது.

அந்தப் பை யாருடையது என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x