Published : 12 Sep 2020 06:44 AM
Last Updated : 12 Sep 2020 06:44 AM

கரோனா வைரஸ் பரவலை சமாளிக்க இந்தியா மேலும் பல சலுகைகளை அறிவிக்கலாம்: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

வாஷிங்டன்

இந்தியாவின் வளர்ச்சியை கரோனா வைரஸ் பெருமளவு பாதித்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்த கொள்கை மிகவும் அவசியமாகிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) சுட்டிக் காட்டியுள்ளது.

மிகவும் எதிர்பாராது வந்த இந்த வைரஸ் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்த கொள்கை மிகவும் அவசியம் என்று ஐஎம்எப் செய்தித் தொடர்பாளர் கெரி ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்ள நிதி சலுகைகளை அறிவிக்க வேண்டும். இதற்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஐஎம்எப் ஆதரிக்கும். குறிப்பாக குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

கடன்கள் மீதான தளர்வை ஏற்படுத்துவது, பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது, நிதி சார்ந்த கட்டுப்பாடு அமைப்புகள் கடன் பெற்ற பொதுமக்கள் மீது நெருக்குதலை ஏற்படுத்தாத சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம். இந்த விஷயத்தில் நிதி உதவி அதாவது ரொக்க பரிவர்த்தனையை அவசியமேற்பட்டால் எடுக்கலாம். அதிலும் குறிப்பாக உடல் நலன், உணவு உள்ளிட்டவற்றுக்கு வருவாய் சார்ந்த உதவிகளை மேற்கொள்ள வேண்டும். இவைதான் பெருமளவு குடும்பங்களை பாதித்துள்ளது என்றும், தொழில் துறையினருக்குத் தேவையான உதவிகளை செய்யலாம் என்றும் ரைஸ் குறிப்பிட்டார்.

2020-ம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 23.9 என்ற நிலைக்கு சரிந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் பாதிப்பால் உலக பொருளாதார நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஐஎம்எப் கணிப்பின்படி 2020-21-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 4.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. சந்தை மதிப்பை உருவாக்குவது, கடனுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று ரைஸ் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x