Published : 09 Sep 2020 07:41 PM
Last Updated : 09 Sep 2020 07:41 PM
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப், ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செல்ல இருக்கிறார்.
இதுகுறித்து தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் அடுத்த வாரம் யுகே, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செல்ல இருக்கிறார். இப்பயணத்தில் அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் உதவியைக் கோருவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வாக்களித்தது குறிப்பிடத்தகது.
அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT