

கரோனா வைரஸ் பரிசோதனையை முறையாகச் செய்யாத இந்தியர்கள் உள்பட 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் கண்டிப்பாக வெளிநாட்டினர் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தவறுபட்சத்தில் அவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றத் தடைவிதிக்கப்படும் என்ற விதிமுறை இருக்கிறது. இதன்படி தடை விதித்து இன்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பிரத்யேக கோட் வழங்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்து கொண்டால் அந்த கோட் பச்சை நிறத்துக்கு மாறிவிடும். இல்லாவிட்டால் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
அந்த வகையில் 13 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் பிரத்யேகமாக வழங்கப்பட்ட ஸ்டேட்ஸ் கோட் சிவப்பு நிறத்திலேயே இருப்பதால், மற்ற தொழிலாளர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில், 13 ஆயிரம்தொழிலாளர்களும் தொடர்ந்து பணியாற்ற தடை விதித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விதிமுறைப்படி இந்த 13 ஆயிரம் தொழிலாளர்களும் கடந்த 5-ம் தேதிக்குள் தங்களின் பரிசோதனையை முடித்திருந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்டேட்டஸ் கோட் பச்சை நிறத்தில் இருந்திருக்கும்.
ஆனால், அவர் பரிசோதனை செய்யவில்லை. இவர்கள் அனைவரும் இனிமேல் கரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 13 ஆயிரம் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் டார்மெட்ரி எனப்படும் சிறிய அடுக்குப்பகுதி படுக்கைகளில் தங்கி இருக்கின்றனர். இவர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்தஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதால், ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் தொழிலாளர்கள் கரோனா பரிசோனை செய்ய வேண்டும் என்று அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களே நினைவூட்டி விடுமுறை அளித்து வடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.