Published : 05 Sep 2020 08:26 PM
Last Updated : 05 Sep 2020 08:26 PM
பிரான்ஸில் அடுத்த இரண்டு வாரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமானவர்கள் சேர்க்கப்படலாம். எனவே, நாட்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அ்ந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஆலிவர் வேரன் கூறும்போது, “பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 8,975 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம், ஒவ்வொரு நாளும் சராசரியாக 55 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ஐ.சி.யூ) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் பொருள் நம் நாட்டில் மாதத்திற்கு சராசரியாக 1,500-2,000 பேர் ஐ.சி.யூ பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்.
அடுத்த இரு வாரங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். தீவிர சிகிச்சைப் பிரிவில் நிறைய நபர்கள் அனுமதிக்கப்படலாம். பிரான்ஸில் ஊரடங்கு தளர்வால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரான்ஸ் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராட வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT