Published : 04 Sep 2020 11:04 PM
Last Updated : 04 Sep 2020 11:04 PM

ஈரானில் ஒரே நாளில் அதிகபட்ச கரோனா பாதிப்பு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,036 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,036 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,82,772 ஆக அதிகரித்துள்ளது. இது ஈரானில் சமீபத்தில் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கரோனாவிலிருந்து 3,30,308 பேர் குணமடைந்துள்ளனர். 22,044 பேர் பலியாகி உள்ளனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானின் பொருளாதாரம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x