

வடக்கு இங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹான் காக் கூறும்போது, “வடக்கு இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
கிளாக்ஸோ ஸ்மித் க்லைன் மற்றும் சனோஃபி பாஸ்டர் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து சுமார் 60 மில்லியன் அளவுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி விவரங்களை ரஷ்யா திருட முயல்வதாக பிரிட்டன் முன்னரே குற்றம் சாட்டியது.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வியடைந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.