Published : 02 Sep 2020 06:27 PM
Last Updated : 02 Sep 2020 06:27 PM
அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மல்யூத்த வீரருக்கு மரண தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் தரப்பில், “2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தைச் சரியாக எதிர்கொள்ளாத ஈரான் அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஈரானின் மல்யூத்த வீரர் நவ்வித் அக்பரிக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அவரது சகோதரர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாகக் கூட்டங்களைச் சேர்ப்பது, தேசியப் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களைச் செய்வது, ஈரான் மூத்த தலைவர்களை அவமதித்தது போன்ற குற்றச் செயல்களின் பேரில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று ஈரான் உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் நவ்வித் அக்பரிக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஈரானில் சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
மரண தண்டனை வழங்குவதில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் ஈரான் உள்ளது. ஈரானில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT