Published : 01 Sep 2020 09:52 PM
Last Updated : 01 Sep 2020 09:52 PM

ஸ்பெயினில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: 5 நாட்களில் 23,000 பேர் பாதிப்பு

ஸ்பெயினில் 23,000க்கும் அதிகமான கரோனா தொற்று 5 நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 2,489 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை ஸ்பெயினில் 23,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஸ்பெயினில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இதுவரை 4,62,858 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவின் சங்கிலிப் பிணைப்பை விரைவாக நாம் தடுக்க வேண்டும் என்று ஸ்பெயின் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்பெயினின் மாட்ரிட் பகுதி தொடர்ந்து கரோனா பரவலின் மையமாக உள்ளது. ஸ்பெயினின் பல மாகாணங்களில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. ஸ்பெயினில் கரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கரோனா பரவல் தீவிரமாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x