Published : 29 Aug 2020 07:53 PM
Last Updated : 29 Aug 2020 07:53 PM

ஆப்கானிஸ்தானில் வெள்ளப் பெருக்கு: பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

“ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

தற்போதுவரை வெள்ளத்தில் சிக்கி 160 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர். 15 பேர் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கில் பர்வான் மாகாணம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. பர்வான் மாகாணத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளப் பெருக்கு ஒரு பக்கம் இருக்க, தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் படைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதில் சமீப நாட்களாக தலிபான்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ்

ஆப்கானிஸ்தானில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 1,402 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x