

கரோனா தொற்று காலத்தில் இந்திய மாணவர்களை தேசியத் தேர்வுகளை எழுதக் கூறுவது நியாயமற்றது என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கிரெட்டா துன்பெர்க் மற்றும் வனேசா நகதேவும் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கிரெட்டா துன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா தொற்றுநோய் காலத்திலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இந்திய மாணவர்களைத் தேர்வு எழுதக் கூறுவது நியாயமற்றது. ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்கும் அழைப்புக்குத் துணை நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கிரெட்டா மட்டுமல்லாது உகண்டாவின் சுற்றுச்சூழல் செயற்பாட்டளருமான வனேசா நகதேவும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக, செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் இந்தியாவில் நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. இம்முடிவுக்கு இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 31 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.