Last Updated : 19 Aug, 2020 07:59 AM

 

Published : 19 Aug 2020 07:59 AM
Last Updated : 19 Aug 2020 07:59 AM

மாலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்: அதிபர், பிரதமர் சிறைபிடிப்பு; ராஜினாமா செய்து ஆட்சி கலைக்கப்பட்டதாக அறிவிப்பு 

அதிபர் இர்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா : கோப்புப்படம்

பமாகோ

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா, பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரைச் சிறைபிடித்தனர்.
நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இர்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பதவியை ராஜினாமா செய்வதாகவும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் தொலைக்காட்சியில் மக்களுக்கு அறிவித்தார்.

மாலி நாட்டின் அதிபராக இருக்கும் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா 2-வது முறையாக அதிபராக தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும்நிலையில், அவரை பதவியிலிருந்து விலகக்க கோரி பல மாதங்களாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக திடீரென ராணுவப்புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

ராணுவத்தின் பிடியில் இருந்துவரும் அதிபர் இப்ராஹிம் பபுபக்கர் கெய்ட்டா தொலைக்காட்சியில் முகக்கவசம் அணிந்தவாறு நேற்றுப் பேசுகையில் “ நான் உடனடியாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன், ராஜினாமா அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றமும் கலைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

தலைநகரைக் கைப்பற்றியுள்ள மாலி ராணுவத்தினர்

ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாலியில் நடந்த தேர்தலில் மக்களால் ஜனநாயக முறைப்படிதான் இப்ராஹிம் பபுபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராணுவத்தின் பிடியில் இருப்பதால், வேறுவழியின்றி கெய்ட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக நேற்று காலை முதல் பமாகோ நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி, சுதந்திரமாக வலம் வந்தனர். அப்போதே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நகரம் வந்துவிட்டது என அறியப்பட்டது.

இந்நிலையில் திடீரென அதிபர் இப்ராஹிம் பபுபக்கர், பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரின் இல்லத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்து, துப்பாக்கியால் சுட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபரையும், பிரதமரையும் கைது செய்துள்ளதாகவும் ஊடகத்தினரிடம் ராணுவத்தினர் அறிவித்தனர்.

பிரதமர் மெய்கா பவ்பு சிசே, ராணுவத்தினரிடம் பல மணிநேரம் பேச்சு நடத்தினார். அப்போது, ஆயுதங்களை கைவிட்டு வாருங்கள் பேசலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அதற்குராணுவத்தினர் சம்மதிக்கவில்லை.

மாலி நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து மதரீதியான அடிப்படைவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்நாட்டை ஆட்சி செய்த பிரான்ஸ், மற்றும் ஐ.நா. தலையிட்டு ஏற்ககுறைய 7 ஆண்டுகள் ராணுவத்தினருடன் சேர்ந்து தீவிரவாதிகளுடன் போரிட்டு அமைதியை கொண்டு வந்தது.

சாலையில் வலம் வந்த ராணுவத்தினர்

தீவிரவாதிகளின் ஆதிக்கத்தையும் மீறி கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பெற்று அதிபராக இப்ராஹிம் பபுபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.5 ஆண்டுகளை நிறைவு செய்த இப்ராஹிம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், அதிபர் இப்ராஹிம் பபுபக்கரின் ஆட்சியை மக்கள் வெறுக்கின்றனர். ஏன்னென்றால், அதிபர் இப்ராஹிம், மாலி நாட்டை இதற்கு முன் ஆட்சி செய்த பிரான்ஸ் நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுபவராகவும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அவரை பதவியிலிருந்து விலகக்கோரி பல மாதங்களாக ஒரு தரப்பினர் பல போராட்டங்களை நடத்தியதால், அமைதியற்ற சூழல் நிலவி வந்தது. இந்த சூழலில்தான் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x