Published : 14 Aug 2020 01:05 PM
Last Updated : 14 Aug 2020 01:05 PM

இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறைச்சியில் கரோனா வைரஸ்: சீன நகரங்களில் பதற்றம்- தொற்றை குறைத்து மதிப்பிடும் உலகச் சுகாதார அமைப்பு

சீனாவின் இரண்டு நகரங்களுக்கு இறக்குமதியில் வந்திறங்கிய பதப்படுத்தப்பட்ட உறைந்த நிலையிலான உணவுப்பொருளில் கரோனா வைரஸ் இருப்பதாக செய்திகள் எழுந்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஆனால் உணவுச்சங்கியிலில் வைரஸ் நுழைவது பற்றி உலகச் சுகாதார அமைப்பு குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளது.

உறைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சியின் இரெக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் கரோனா வைரஸ் பாசிட்டிவ் என்றும் இந்த இறக்குமதி சீனாவின் ஷென்சென் நகருக்குப் பிரேசிலில் இருந்து வந்ததாகவும், மற்றொரு இறக்குமதியான இறால் உணவில் சீனாவின் ஷியான் நகரில் கரோனா பாசிட்டிவ் உறுதியாகியிருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கன் அரோரா என்ற நிறுவனத்துடையது பிரேசிலின் 3வது மிகப்பெரிய கால்நடை மற்றும் பன்றி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமாகும்.

உலகம் முழுதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் புதிய கரோனா கண்டுப்பிடிப்புகள் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளன. அதாவது தரை உள்ளிட்ட மேற்பரப்பிலும் பரவி உணவுச்சங்கிலியில் நுழைந்து விடுமோ என்பதுதான் இந்த சீன இறக்குமதி கரோனா கண்டுப்பிடிப்புகள் ஏற்படுத்தும் மிகப்பெரிய பீதியாகும்.

இதற்கிடையே கரோனா இல்லாத நாடாகக் கொண்டாடிய நியூஸிலாந்தில் திடீரென தொற்று ஏற்பட்டதற்கும் இறைச்சி இறக்குமதிக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

-20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைரஸ்கள் 2 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கும். ஆனால் விஞ்ஞானிகள் தற்போது உணவுச்சங்கிலி மூலம் வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.

உலகச் சுகாதார அமைப்பின் அவசரநிலை திட்டத் தலைவர் மைக் ரயான், செய்தி நிறுவனம் ஒன்றிற்குக் கூறுகையில், “உணவு, உணவு பேக்கிஜ் அல்லது உணவு டெலிவரி ஆகியவை கண்டு பயப்பட வேண்டாம்” என்கிறார்.

யுஎஸ்.எஃப்டிஏ மற்றும் வேளாண் துறையினரும் உணவு அல்லது உணவு பேக்கேஜ் வழியாகவெல்லாம் வைரஸ் பரவாது என்று உறுதிபடக் கூறுகின்றனர்.

பிரேசில் நிறுவனமும் இது குறித்து உணவு மூலம் கரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.

இதற்கிடையே ஷென்சென் மருத்துவ அதிகாரிகள் உணவு ப்பொருள் கரோனா செய்தியை அடுத்து இதனுடன் தொடர்புடைய பலரை தடம் கண்டு டெஸ்ட் செய்தது, ஆனால் அனைவருக்கும் நெகெட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.

ஆனால் சிக்கனில் எப்படி கரோனா பாசிட்டிவ், எந்த கட்டத்தில் வந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இருப்பினும் கடல் உணவு மற்றும் இறக்குமதி இறைச்சிப் பொருளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு ஷென்சென் மாகாண அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சீனாவில் முதல் கொத்து கரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணமாக வூஹான் நகரின் ஹுவானன் கடல் உணவு சந்தை காரணமாகக் கூறப்பட்டது.

சீனா தேசிய உணவுப் பாதுகாப்பு மையத்தின் நுண் உயிரியல் பிரிவுத் தலைவர் லீ ஃபெங்க்வின் என்பவர், ஜூன் மாதம் கூறிய போது, கெட்டுப்போன பதப்படுத்தப்பட்ட உணவு மூலம் புதிய கிருமித் தொற்று சாத்தியம் உள்ளது என்று கூறியிருந்தார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மிகப்பெரிய ஷின்ஃபாடி உணவுச்சந்தையில் கடந்த ஜூன் மாதம் கொத்தாக தொற்று ஏற்பட்ட மையமாக இருந்தது. இன்று வரையில் கூட ஷின்ஃபாடி சந்தையில் எப்படி வைரஸ் நுழைந்தது என்பதை யாரும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில் இறக்குமதிச் செய்யப்பட்ட உணவுகளில் கரோனா தொற்று என்பது அங்கு புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

(ஏஜென்சி தகவல்களுடன்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x