Published : 13 Aug 2020 10:28 PM
Last Updated : 13 Aug 2020 10:28 PM
ஈரானில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19,000-ஐ கடந்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,625 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,36,324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவுக்கு 174 பேர் பலியாக இதுவரை ஈரானில் 19,162 பேர் கரோனா பலியாகி உள்ளனர். 2,92,058 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கரோனா இறப்பு அரசு கூறுவதைவிட முன்று மடங்கு அதிகம் என்று பிபிசி சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஈரான் அரசு பதிலளிக்கவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் அதிக அளவில் ஈரானும், சவுதியும் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT