உணவு நெருக்கடி: லெபனானுக்கு தானியங்களை வழங்கும் ஐ. நா

உணவு நெருக்கடி: லெபனானுக்கு தானியங்களை வழங்கும் ஐ. நா
Updated on
1 min read

பெய்ரூட் வெடி விபத்து காரணமாக லெபனானில் ஏற்படும் உணவு பற்றாகுறையை தவிர்க்கும் பொருட்டும் பல டன் மதிப்பிலான தானியங்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்ப உள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். உலக நாடுகளையே இந்த பெய்ரூட் விபத்து அதிர்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்தில் அங்கிருந்த தானிய குவியல்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. எனவே லெபனானில் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்கும் பொருட்டு 50,000 டன் எடையையுடைய தனியங்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்க உள்ளது,

இதுகுறித்து ஐ.நா.வின் மற்றொரு அமைப்பான மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு கூறும்போது,” லெபனானுக்கு மூன்று மாதங்களுக்கு போதுமான 50,000 டன் எடை கொண்ட தனியங்களை அனுப்ப இருக்கிறோம். இதன் முதல் கட்டமாக 17,000 டன் எடைக் கொண்ட உணவு பொருட்கள் 10 நாட்களில் சென்றடைய உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெய்ரூட் வெடி விபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் அரசு பதவி விலகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லெபனான் பொருளாதார பற்றாக்குறையை சந்தித்து வந்தது. இந்த நிலையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் சரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in