Published : 11 Aug 2020 07:11 AM
Last Updated : 11 Aug 2020 07:11 AM

சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் லடாக் உட்பட பல எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்திய அமெரிக்கர்கள் நேற்றுமுன்தினம் சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் வாஷிங்டன் மற்றும் பிற நகரங்களில் இருந்து வந்த ஏராளமான அமெரிக்க இந்தியர்கள் பிரபலமான நேஷனல் மால் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்களை சீன கம்யூனிஸ்ட் அரசு ஒடுக்கி வருவது மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கண்டன குரல் எழுப்பினர். கரோனா பரவல் காரணமாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். மேலும் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீனாவுக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து பாஜக.வில் உள்ள வெளிநாட்டு நண்பர்கள் பிரிவின் உறுப்பினர் அடப்பா பிரசாத் கூறும்போது, ‘‘உலகமே கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது, சீனா மட்டும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு லடாக்கில் மட்டுமல்ல, மற்ற அண்டை நாடுகளிடமும் நடக்கிறது’’ என்றார்.

சீனாவில் வாழும் உய்குர் இன மக்கள் லட்சக்கணக்கானோர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. உய்குர் முஸ்லிம்களின் மதம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றி ‘சீன மயமாக்கும்’ முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்தும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன குரல் எழுப்பினர்.

சீனாவுக்கு எதிராக வாஷிங்டனில் ஏற்கெனவே மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x