

கரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு சுமார் 1.7 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள பாதுகாப்பு உபகரணங்களை லெபனான் அரசுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கூறும்போது, “ லெபனானுக்கு அவசர உதவிகளுக்கான நிதியிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சை உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. 1.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் தலைநகரம் பெய்ரூட் வெடிவிபத்தின் மீது அப்பகுதியிலிருந்த ஏராளமான மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்தே தற்போது உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். உலக நாடுகளையே இந்த பெய்ரூட் விபத்து அதிர்ச்சியடைய செய்தது.