பெய்ரூட் வெடி விபத்து: சுதந்திரமான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு

பெய்ரூட் வெடி விபத்து: சுதந்திரமான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு
Updated on
1 min read

பெய்ரூட் வெடி விபத்து விவகாரத்தை சுதந்திர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பின் செய்தித் தொடர்பாளர், “லெபனான் தற்போது இரு பெரும் சமூக - பொருளாதாரத் துயரங்களைச் சந்தித்துள்ளது. ஒன்று கரோனா வைரஸ் மற்றொன்று பெய்ரூட் வெடி விபத்து. அரசியல் குறைகளைத் தவிர்த்து மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 135க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையும் லெபனான் அரசுக்கு உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in