

சீனாவின் வூஹான் நகரில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 90% பேர் நுரையீரல் பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வூஹான் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், இயக்குனர் பெங் ஸியாங் தலைமையில் இயங்கிய மருத்துவக் குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த மருத்துவ அறிக்கையில், “நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனாவிலிருந்து மீண்டவர்களைக் கண்காணித்து வந்தோம். குணமடைந்தவர்களில் பலர் 6 நிமிடங்களில் 400 மீட்டர் தூரம் மட்டுமே நடந்து செல்கின்றனர். இந்த மருத்துவ முடிவுகள் நோயாளிகளின் நடைப்பயிற்சி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் சில கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் இயந்திரங்களை நம்ப வேண்டியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை 84,565 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் பலியாகினர்.
கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.