Last Updated : 05 Aug, 2020 09:47 AM

 

Published : 05 Aug 2020 09:47 AM
Last Updated : 05 Aug 2020 09:47 AM

கரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு காரணம்’

கோப்புப்படம்

பாஸ்டன்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏறக்குறைய 50 லட்சத்தை நெருங்கியுள்ளது, 1.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று வேர்ல்டோ மீட்டர் தகவல் தெரிவிக்கிறது.

சமூக விலகல், முகக் கவசம் அணிதல், என எதையும் மக்கள் பின்னபற்றாமல் திருமணம், பட்டமளிப்பு விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களில் சுயநலத்துடன் பங்கேற்பதுதான் தொடர்ந்து புதிது புதிதாக கரோனா நோயாளிகள் அதிகரிக்க காரணம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக விலகலைக் கடைபிடிப்பதும், முகக்கவசம் அணிவதும் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது என்று மக்கள் நம்புவதும் கரோனா அதிகரிப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

ராக்பெல்லர் அறக்கட்டளையின் முன்னணி தொற்றுநோய் தடுப்பு வல்லுநரும், டியூக் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவருமான ஜானதன் குயிக் கூறுகையில் “ சுகாதார நடவடிக்கைகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் விதவிதமாக கருத்துக்களை கூறி மக்களை குழப்பி வருகின்றனர். சிலர் முகக்கவசம் அணியுங்கள் என்றும், சிலர் தேவையில்லை என்றும் கூறி மக்களை குழப்புவதால் விதிகளை மக்கள் பின்பற்றுவதில்லை. இப்படி இருந்தால் எவ்வாறு கரோனாவை கட்டுப்படுத்த முடியும்?

தற்போது 50 லட்சம் நோயாளிகளை எட்ட இருக்கிறது அமெரிக்கா. நாள்தோறும் 60 ஆயிரம் பேர் புதிததாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த மாதத்தில் 70 ஆயிரம் பேர் அதிகபட்சமாக ஒரே நாளில் பாதி்க்கப்பட்டார்கள். 26 மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்திலிருந்து நாள்தோறும் 780 என்ற எண்ணிக்கையில் இருந்த உயிரிழப்பு படிப்படியாக அதிகரித்து ஆயிரத்தைக் கடந்துள்ளது.” என எச்சசரித்துள்ளார்.

மசாசூசெட்ஸ் நகர சுகாதார அதிகாரிகள் கூறுகையில் “ மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் மக்கள் சிறிதுகூட அக்கறையில்லாமல் விழாக்கள், பள்ளி,கல்லூரி பட்டமளிப்பு விழாக்களில் கூட்டமாக பங்கேற்பது, கால்பந்து முகாம், கூட்டமாக கப்பல் பயணம் ஆகியவற்றில் செல்வதே காரணம். முகக்கவசம், சமூக விலகலைக் கடைபிடிக்க மறுக்கின்றனர்.

சமீபத்தில் கேப் காட் எனுமிடத்தில் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 60 பேர் பங்கேற்றனர். இதில் 20 பேருக்கு மேல் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சவுத் டகோடா பகுதியில் உள்ள பிளாக் ஹில்ஸ் பகுதியில் கோடைகால பயிற்சி முகாமில் ஈடுப்டட 328 பேரில் 96 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

போர்ட்லாண்ட், ஓரிகான் ஆகிய நகரங்களிலும் மதரீதியான கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தடுப்பு வல்லுநர் மருத்துவர் சிண்டி பிரின்ஸ் கூறுகையில் “ மக்களின் பழக்கவழக்கம், நடவடிக்கைதான் கரோனா அதிகரிப்புக்கு காரணம். மக்கள் அனைவரும் சுயநலத்துடன், சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

தடுப்பு நடவடிக்கை என்றாலே நமது பழக்கத்தை மாற்றியமைப்பதுதான். ஆனால், இதைச் செய்ய அமெரிக்க மக்கள் தயங்குகிறார்கள். பழக்கவழக்கத்தால் வரும் நோய்தான் கரோனா. இதை நாம் பழக்கத்தை மாற்றுவதின் மூலம் தோற்கடிக்க முடியும். ஆனால் இதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x