ஆப்கன் சிறைச்சாலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி

ஆப்கன் சிறைச்சாலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் சிறைக் கைதிகளும், பொதுமக்களும், சிறைக் காவலர்களும் அடங்குவர்.

இன்று அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகளில் மூன்று பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்தத் திடீர் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாதிகளும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in