Last Updated : 31 Jul, 2020 07:35 AM

 

Published : 31 Jul 2020 07:35 AM
Last Updated : 31 Jul 2020 07:35 AM

பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ மனைவிக்கு கரோனா தொற்று

பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ அவரின் மனைவி மிச்செல் போல்சனாரோ : கோப்புப்படம்

பிரசிலியா


பிரேசிலின் அதிபர் ஜேர் போல்சனாரோ மனைவி மிச்செல் போல்சனாராவுக்கும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மற்றொரு மூத்த அமைச்சருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவர் குழு நேற்று அறிவித்தது.

ஏற்கெனவே பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை உடல்நலம் தேறிய நிலையில் அவரின் மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரேசிலின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மார்கோஸ் பாண்ட்ஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ப்ளூ காய்ச்சல் அறிகுறியும், தலைவலியும் இருப்பதால் நான் கரோனா பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ இம்மாத தொடக்கத்தில் கடந்த 7-ம் தேதி கரோனாவில் பாதிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைப் போல் முகக்கவசம் அணியாமல் அதிபர் போல்சனாரோ பல்வேறு நகரங்களிலும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். முழுமையான ஊரடங்கு பிறப்பிப்பதிலும், முக்ககவசம் அணிவதிலும் நம்பிக்கையில்லாமல் போல்சனாரோ இருந்து வந்தார்.

ஆனால், கரோனா வைரஸின் பிடியில் போல்சனாரோவும் தப்பவில்லை. கடந்த 7-ம் தேதி கரோனா தொற்றுக்கு ஆளான போல்சனாரோ கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதில் போல்சனாரோவுக்கு இரு முறை ரத்தப்பரிசோதனை எடுக்கப்பட்டும் பாஸிட்டிவ் வந்தது. மூன்றாவது முறையாக கடந்த சனிக்கிழமைதான் நெகட்டிவ் வந்தது.

இருப்பினும் தொடர்ந்து வீட்டில் முடங்கிக் கிடக்க விருப்பமில்லாத அதிபர் போல்சனாரோ நேற்று கரோனாவிலிருந்து குணமடைந்தபின் முதல்முறையாக புதன்கிழமை தனது மனைவியுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில் அதிபர் போல்சனாரோவின் மனைவிக்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக நேற்று மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர்.

இதையடுத்து, உடனடியாக மிச்செல் போல்சனாரோ தனிமைப்படுத்திக்கொண்டார். மிச்சல் போல்சனாரோ நல்ல உடல்நலத்துடன், இயல்பாக இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரேசில் அமைச்சர்கள் ஓனிக்ஸ் லோரன்ஜோனி, கல்வித்துறை அமைச்சர் மில்டன் ரிபைரோ ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x