ஹஜ் புனிதப் பயணத்துக்கு சட்டவிரோதமாக வந்தவர்கள் கைது: சவுதி
ஹஜ் புனிதப் பயணத்திற்கு சட்டவிரோதமாக வருகை தந்த 244 பேரைக் கைது செய்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரசுத் தரப்பில், “ஹஜ் புனித யாத்திரைக்கு சட்ட விரோதமாக வந்த 244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனித நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக இந்த வருடம் 1000 பேர் மட்டுமே வருகை தர உள்ளனர்.
ஹஜ் புனிதப் பயணம் இந்த ஆண்டு ரத்து இல்லை. அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான பயணிகளும் அனுமதிக்கப்படமாட்டார்கள். உள்நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்கள் மட்டுமே குறைந்த அளவில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய அரசு முன்னரே அறிவித்திருந்தது.
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
