Published : 29 Jul 2020 05:15 PM
Last Updated : 29 Jul 2020 05:15 PM
கிளாசோ ஸ்மித் க்லைன் மற்றும் சனோஃபி பாஸ்டர் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து சுமார் 60 மில்லியன் அளவுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
கிளாசோ ஸ்மித் க்லைன், சனோஃபி பாஸ்டர் ஆகிய மருந்து நிறுவனங்கள் உலக அளவில் தடுப்பு மருந்துகளை அதிக உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டில் வெளிவரவுள்ள இந்தக் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரிட்டன் அரசு தற்போதே ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “சுமார் 60 மில்லியன் அளவில் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க கிளாசோ ஸ்மித் க்லைன் மற்றும் சனோஃபி பாஸ்டர் மருந்து நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
கிளாசோ ஸ்மித் க்லைன் மற்றும் சனோஃபி பாஸ்டர் மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்து வெற்றிகரமாக இருப்பின் அவை சுகாதாரப் பணியாளர்கள், அவசரத் தேவை உள்ளவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக, பிரிட்டன் அரசு இதுவரை நான்கு மருத்துவ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி விவரங்களை ரஷ்யா திருட முயல்வதாக பிரிட்டன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT