

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் வடமேற்கு மாகாணமான சின்ஜியாங் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 57 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெய்ஜிங்கிலும் ஒருவருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீன கடற்கரை நகரமான தலியனில் கரோனா மருத்துவப் பரிசோதனைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் 83,959 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.