Last Updated : 28 Jul, 2020 08:51 AM

 

Published : 28 Jul 2020 08:51 AM
Last Updated : 28 Jul 2020 08:51 AM

தேர்தல் தினத்துக்குள் கரோனா தடுப்பு மருந்து: வேறு வழியின்றி உந்தித் தள்ளும் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43.12 லட்சத்தைக் கடந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் கரோனாவைக் கையாண்ட விதம், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் விவகாரம், பெப்சிட் எனும் அல்சர் மருந்தை கரோனாவுக்குக் கொடுக்கும் ஆராய்ச்சிக்கான செலவீடு, நிறவெறிப் பிரச்சினை, பெருகும் வேலையின்மை என்று அதிபர் ட்ரம்புக்கு சிக்கல்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடைசி ஒரே வழியாக தேர்தலுக்குள் எப்படியாவது கரோனா வாக்சினைக் கண்டுப்பிடிக்க உந்தித் தள்ள வேண்டும் என்ற முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார். எந்த கரோனா அவரது செல்வாக்கை வீழ்த்தியதோ அதே கரோனாவைதான் அவர் செல்வாக்கை மீட்க நம்பியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

கரோனா வாக்சின் ஒன்று இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனையான 30,000 பேருக்குச் செலுத்திச் சோதிக்கும் கட்டத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்க தேசியச் சுகாதார நிறுவனம், மாடர்னா என்ற நிறுவனத்துடன் இணைந்து எம்.ஆர்.என்.ஏ. என்ற வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இது 3ம் கட்ட ஆய்வான 30,000 தன்னார்வலர்களுக்கு செலுத்தும் கட்டத்தை எட்டியுள்ளது. இது 100 மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகிலேயே முதன் முறையாக இவ்வளவு பேருக்கு தடுப்பு மருந்து அளித்து சோதிப்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் அதிபர் ட்ரம்பும், துணை அதிபர் மைக் பென்சும் வாக்சின் உருவாகும் மையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் முதல் குடியரசுக் கட்சி பிரமுகர்கள் வரை கரோனா தடுப்பு மருந்தில்தான் ட்ரம்ப் தேர்தல் வெற்றி அடங்கியிருப்பதாகக் கருதுகின்றனர். ஒரு ‘அக்டோப்டர் அதிசயம்’ என்பதற்காக காத்திருக்கின்றனர், இல்லையெனில் ட்ரம்ப் கதை முடிந்தது என்ற நிலையே அங்கு நிலவுகிறது.

ஆனாலும் நவம்பர் 3ம் தேதி மக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அக்டோபர் அதிசயமும் வேலைக்கு ஆகாது என்று சிலர் கருதுகின்றனர்.

தன் தேர்தல் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்சின் நடைமுறைகளுக்கு குறுக்கு வழி அனுமதி நடைமுறைகளை ட்ரம்ப் கடைப்பிடிக்கலாம் என்ற கவலைகளும் அங்கு எழுந்துள்ளன.

நிறவெறி எதிர்ப்புக் கதையாடல் ட்ரம்புக்கு எதிரான போக்கை அங்கு திரட்டி வரும் நிலையில் நிறவெறியை முடக்க ட்ரம்புக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கரோனா தடுப்பு மருந்துதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x