Last Updated : 27 Jul, 2020 10:14 AM

 

Published : 27 Jul 2020 10:14 AM
Last Updated : 27 Jul 2020 10:14 AM

சீனா பதிலடி: செங்டூ நகரில் அமெரிக்கத் தூதரகம் மூடல்; கொடி இறக்கப்பட்டது

செங்டூ நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்ட காட்சி: படம் உதவி | ட்விட்டர்.

செங்டூ

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் சீனத் தூதரகத்தை மூடக் கோரி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனாவின் செங்டூ நகரில் அமெரிக்கத் தூதரகத்தை மூடக்கோரி சீனா உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து செங்டூ நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று மூடப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள செங்டூ நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டு, அங்கு ஏற்றப்பட்டிருந்த அமெரிக்கக் கொடி இன்று காலை 6.18 மணிக்கு இறக்கப்பட்டது.

அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதி போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, தூதரகத்தில் இருக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள், அறிவுசார் சொத்துரிமை, கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும் ரகசியத் தகவல்கள் ஆகியவற்றை சீனாவின் ஹேக்கர்கள், சீனத் தூதரகத்தின் உதவியுடன் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, அதுகுறித்து அமெரிக்க நீதித்துறையும் எச்சரிக்கை விடுத்தது.

ஹூஸ்டனில் சீனத் தூதரகம் மூடப்பட்ட காட்சி.

இதையடுத்து முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை அடுத்த 72 மணிநேரத்துக்குள் மூடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடியாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டூ நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகத்தை மூட சீன அரசு உத்தரவிட்டது. அமெரிக்காவின் செயலுக்குப் பதிலடியாக சீனாவும் நடவடிக்கை எடுத்தது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம், மனித உரிமைகள், பாதுகாப்பு, கரோனா வைரஸ் உள்ளிட்ட விஷயங்களில் இருந்த மோதல் இன்னும் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் செங்டூ நகரில் மூடப்படுவதையடுத்து நேற்று முதலே தூதரகம் அமைந்துள்ள பகுதி பரபரப்பாக இருந்தது. அமெரிக்க அதிகாரிகள் காரில் வருவதும், செல்வதுமாக இருந்தனர். இதனிடையே நேற்று பின்னரில் மிகப்பெரிய டிரக் வந்து ஏராளமான பொருட்களைக் கொண்டு சென்றதாக சீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதைத் தொடரந்து அப்பகுதிக்குள் மக்கள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. செல்ஃபி எடுக்கவோ, நடக்கவோ, வாகனங்களில் செல்லவோ போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இரும்புத் தடுப்புகளை வைத்து அப்பகுதிக்குள் மக்கள் நடமாட்டத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x