வலுக்கும் மோதல்: ஆப்கன் அரசுப் படை தாக்குதலில் தலிபான்கள் 24 பேர் பலி

வலுக்கும் மோதல்: ஆப்கன் அரசுப் படை தாக்குதலில் தலிபான்கள் 24 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது ஆப்கன் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

“ஆப்கானிஸ்தானின் சபூல் மாகாணத்தில் உள்ள அர்கன்தாப், ஷின்க்சாய், ஷாஜாய் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 24 தலிபான்கள் பலியாகினர். 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்” என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள கம் சியாராத் பகுதியில் தலிபான்களைக் குறிவைத்து அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலில் தலிபான்களும் கொல்லப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் ஆப்கன் அரசுப் படைகள் மீது தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த நிலையில் இதற்குப் பதிலடியாக தலிபான்களைக் குறிவைத்து ஆப்கன் ராணுவம் தாக்குதல் தொடுத்து வருகிறது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமாதான உடன்படிக்கை

அல்கொய்தா தீவிரவாதிகளுக்குத் தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in