Published : 23 Jul 2020 09:05 PM
Last Updated : 23 Jul 2020 09:05 PM
கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து இந்த வருடத்தின் இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இம்மருந்துவ நிறுவனத்தின் இறுதிக்கட்ட பரிசோதனை அடுத்த மூன்று மாதத்திற்குள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டமாக சுமார் 15,000 பேருக்கு இம்மருந்தைச் செலுத்தி சீனா பரிசோதிக்க உள்ளது.
சீனா, ஐக்கிய அரபு அமீரகத்துடனும் இணைந்து கரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கரோனா தடுப்பு மருந்துகள்
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பலநாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT