Published : 23 Jul 2020 02:14 PM
Last Updated : 23 Jul 2020 02:14 PM
தென் கொரியாவில் புதிதாக 59 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “கடந்த சில தினங்களாகவே தென் கொரியாவில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சியோலில் உள்ள ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றில் கரோனா தொற்றுப் பரவல் புதிதாக ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது.
தென்கொரியாவில் இதுவரை 13,938 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தென்கொரியாவில் கரோனா பரவல் தொடங்கியது. இதுவரை அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று சீனாவிலிருந்து முதன்முதலாக தென் கொரியாவுக்குப் பரவிய நிலையில், அங்கு பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் முதற்கட்டப் பரவல் ஏற்பட்டது. பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு 900 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து முறையான பரிசோதனை மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT