

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலிருந்து 105 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரிவில்லேவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வடக்கு அமெரிக்காவில் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
அலாஸ்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோஃப் தீவுப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியது. இந்நிலையில் மீண்டும் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 நவம்பர் மாதம் அலாஸ்காவில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்தன.
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் ரிங் ஆப் ஃபயர் பகுதியில்தான் அலாஸ்கா உள்ளது. இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும். இதனால் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.