Published : 21 Jul 2020 03:13 PM
Last Updated : 21 Jul 2020 03:13 PM

விக்டோரியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

ஆஸ்திரேலியாவில் இரு வாரங்களாகத் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் விக்டோரியா மாகாணத்தில் சுமார் 374 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாகாணமான விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 375 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 வயதான பெண்கள் பலியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் 275 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. விக்டோரியா மாகாணத்தில் 6,300 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.

விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 12,069 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x