Published : 21 Jul 2020 11:49 AM
Last Updated : 21 Jul 2020 11:49 AM

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்: 8 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 8 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் உள்ள மைதன் மாகாணத்தில் சையத் அபாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 8 ஆப்கன் ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் மீது ஆப்கன் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x