

ஆப்கானிஸ்தானில் ஆப்கான் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் அஸ்பாண்டி பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இதில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.