Published : 17 Jul 2020 11:58 AM
Last Updated : 17 Jul 2020 11:58 AM

பிரேசிலில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்தது

பிரேசிலில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு ஒரே மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்,”பிரேசிலில் கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் 20,14,738 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 பேர்வரை பலியாகி உள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் கரோனா பரவல் ஏற்பட்டதிலிருந்து அதிபர் ஜெய்ர் போல்சனோராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு முறை சுகாதார அமைச்சர் மாற்றப்பட்டார். இந்த நிலையில் கரோனா பரவலை பிரேசில் அரசு சரியாக கையாளவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டியது.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x