Published : 16 Jul 2020 01:11 PM
Last Updated : 16 Jul 2020 01:11 PM
கரோனா வைரஸ் காரணமாக குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் செயல்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “சுமார் 82 நாடுகளில் மே மாதத்தில் யுனிசெஃப் நடத்திய கருத்துக்கணிப்பின்படி குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் நிகழ்வுகள் கரோனா வைரஸ் காரணமாக கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. கரோனா தொற்றுக்கு முன்னரே சுமார் 14 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப் பெறாமல் இருந்தனர். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல இடங்களில் ஊரடங்கு நீடிப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் மருந்துகளைக் கொண்டு செல்வதில் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.
மேலும், வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளை குழந்தைகள் இழப்பதால் ஏற்படும் மரணங்கள் கரோனா வைரஸினால் ஏற்படும் மரணங்களைவிட அதிகமாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.
இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT