Published : 15 Jul 2020 07:37 PM
Last Updated : 15 Jul 2020 07:37 PM

கரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: ரஷ்யா

கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உலக நாடுகளில் முதலாவதாக ரஷ்யா கண்டுபிடித்துள்ள நிலையில், அடுத்த மாதத்தில் அத்தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருகிறது. இதனை அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இதுவரையில் 1.3 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.78 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 8 மாதங்களாக நீடித்து வரும் கரோனா பரவலுக்கு இன்னும் முறையான தடுப்பு மருந்து பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. உலக நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. பரிசோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் குறுகிய காலகட்டத்தில் முடிக்கப்பட்டாலும் அனைத்துக் கட்டச் சோதனைகளுக்கும் முழுமையாக உட்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கமாலேயே ஆய்வு மையத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் கிண்ட்ஸ்பெர்க் கூறும்போது, ”முதற்கட்டமாக குறைந்த அளவு மருந்துகளே பயன்பாட்டுக்கு வரும். அவை மருந்து நிலையங்களில் விற்பனைக்குக் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் 7.46 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 11,770 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x