Published : 15 Jul 2020 11:58 AM
Last Updated : 15 Jul 2020 11:58 AM

அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன்: ட்ரம்ப் நம்பிக்கை

நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இது முக்கியமான தேர்தல். நாம் சிறந்த பணிகளைச் செய்துள்ளோம். இதற்கு முன்னர் எவரும் செய்யாத சாதனைகளை எல்லாம் நாம் செய்துள்ளோம். தேர்தல் நேரத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகளைப் பார்க்கப் போகிறோம். 2016 ஆம் ஆண்டு நடந்ததுபோலவே மீண்டும் வெற்றி பெறுவோம். அடுத்த வருடம் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டதாக அமெரிக்கா இருக்கப் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றைச் சரியாகக் கையாளாததால் அமெரிக்கா பெரும் பொருளாதாரச் சேதத்தைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

ட்ரம்ப் நிர்வாகம் கரோனாவைச் சரியாகக் கையாளவில்லை என்றும் கருப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை என்றும் கூறி குடியரசுக் கட்சி அதிபர் ஜோ பீடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்து வருகிறார்.

கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 35,45,077 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,39,143 பேர் பலியாகினர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x