Published : 12 Jul 2020 07:51 PM
Last Updated : 12 Jul 2020 07:51 PM

ஈரானில் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உதவ வேண்டும்: அயத்துல்லா அலி காமெனி

ஈரானில் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உதவ வேண்டும் என்று அந்நாட்டு மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி ஞாயிற்றுக்கிழமை பேசும்போது, “ஈரானில் கரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் நோய் சங்கிலியை உடைப்பதில் அவர்களால் முடிந்த சிறந்த பங்களிப்பை ஆற்ற வேண்டும். நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு திருமணம் உள்ளிட்ட பெரும் நிகழ்வுகளுக்கு ஈரான் அரசு நேற்று தடை விதித்திருந்தது.

முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒரு வாரம் மூடப்படும் என்றும் அதிபர் ஹசன் ரவ்ஹானி முன்னரே தெரிவித்திருந்தார்.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 2,57,303 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,829 பேர் பலியாகி உள்ளனர். 2,19,993 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x