Last Updated : 12 Jul, 2020 10:08 AM

 

Published : 12 Jul 2020 10:08 AM
Last Updated : 12 Jul 2020 10:08 AM

அமெரிக்காவில் கரோனா பலி 1.34 லட்சம்: முதல் முறையாக முகக்கவசம் அணிந்து சென்ற ட்ரம்ப்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய காலத்திலிருந்து முகக்கவசம் அணிய மறுத்துவந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று ராணுவ மருத்துவமனைக்குச் சென்றபோது முதல் முறையாக முகக்கவசம் அணிந்தார்.

அமெரிக்காவில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் 33 லட்சத்தைக் கடந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.34 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் முதல் முறையாக முகக்கவசம் அணிந்தார் ட்ரம்ப்.
மருத்துவமனைக்குள் செல்லும்போது முக்ககவசம் அணிவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நோய்த் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று மருத்துவர்களும், பாதுகாப்பு ஆலோசகர்களும் அறிவுறுத்தியதை அடுத்து, அதிபர் ட்ரம்ப் முகக்கவசம் அணிந்து சென்றார்.

கரோனா வைரஸால் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவிய ராணுவ வீரர்கள் தொற்றுக்கு உள்ளாகி வாஷிங்டனின் புறநகரில் இருக்கும் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காண்பதற்காக நேற்று தனி ஹெலிகாப்டரில் அதிபர் ட்ரம்ப் சென்றார். எப்போதும்போல் முகக்கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் செல்ல அதிபர் ட்ரம்ப் முயன்றார்.

ஆனால், மருத்துவர்களும், உடன்வந்த பாதுகாவலர்களும் முகக்கவசம் இன்றி மருத்துவமனைக்குள் செல்வது, பாதுகாப்பில்லாதது, நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடலாம் என அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் முதல் முறையாக கரோனா காலத்தில் பொதுவெளியில் முகக்கவசம் அணிந்தார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே துணிச்சல் மிகுந்தவர்கள், உடல் தகுதியுடையவர்கள் என்பதை வெளிக்காட்டவே அதிபர் ட்ரம்ப் முகக்கவசம் அணியாமல் இருந்து வந்தார் எனக் கூறப்படுகிறது.

ஆனால், அவரின் கட்சியைச் சேர்ந்த துணை அதிபர் மைக் பென்ஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தெற்கு, மேற்கு மாநில கவர்னர்கள் பலரும் மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அதிபர் தேர்தல் பிரச்சாரம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு என எந்த நிகழ்ச்சியிலும் முகக்கவசம் அணியாமல் ட்ரம்ப் பங்கேற்று வருகிறார்.

இதுகுறித்து ட்ரம்ப்பின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “முகக்கவசம் அணிந்தால், அதிபர் அச்சமடைந்துவிட்டார், வலுவிழந்துவிட்டார் என்ற தோற்றம் உருவாகிவிடும். அதிபர் ட்ரம்ப்பைப் பொறுத்தவரை சுகாதாரத்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைவிட பொருளாதார மீட்சிக்குத்தான் அதிகமான அக்கறை காட்டுகிறார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை, மூடப்பட்ட அறை, அரங்குகளில் மக்கள் நெருக்கமாக அமர்ந்திருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என ட்ரம்ப் நம்புகிறார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களைவிட குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வலிமையானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ட்ரம்ப் தொடர்ந்து முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருகிறார். அவரின் ஆதரவாளர்களும் துல்சா, ஓக்லஹோமா, போனிக்ஸ், சவுத் டகோட்டா போன்ற நகரங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில்கூட முகக்கவசம் அணியாமல் வந்தனர்’’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x